அதிமுக – பாஜ கூட்டணி உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை அமித்ஷா, சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தார். அவருக்கு அங்கு தடபுடல் விருந்து வழங்கப்பட்டது. அமித்ஷா 53 நிமிடங்கள் எடப்பாடி மற்றும் அதிமுக கட்சி தலைவர்களுடன் பேசிவிட்டு சென்றார். அதிமுக – பாஜ கூட்டணியை உறுதிப்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா தங்கி இருந்தார். இதையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு ஐடிசி ஓட்டலில் அமித்ஷா நிருபர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானதை தெரிவிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திடீரென மறுத்துவிட்டார். கூட்டணி குறித்து தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகே சந்திக்க முடியும் என்று எடப்பாடி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பின்னர், அமித்ஷாவும், குருமூர்த்தியும் சந்தித்துப் பேசினர்.

குருமூர்த்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில உறுதிமொழிகள் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, சென்னையில் அதிமுக கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அமித்ஷா பத்திரிகையாளர் சந்திப்பு தாமதமாகிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் மாலை 4.45 மணிக்கு சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கிண்டிக்கு சென்று, ஐடிசி ஓட்டலில் 5 மணிக்கு அமித்ஷாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானதாக அமித்ஷா தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து அமித்ஷா நேற்று மாலை 5.30 மணிக்கு கிண்டி, ஐடிசி ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தார்.

அவரை எடப்பாடி சால்வை அணிவித்து வரவேற்றார். அமித்ஷாவுடன் எல்.முருகன், அண்ணாமாலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எடப்பாடி வீட்டுக்கு வந்த அமித்ஷாவுக்கு, தடபுடல் விருந்து அளித்து, தேநீர் வழங்கினார்.

எடப்பாடி வீட்டுக்கு மாலை 5.45 மணிக்கு வந்த அமித்ஷா சுமார் 53 நிமிடங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, மாலை 6.42 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதேநேரம் அமித்ஷா வீட்டுக்கு வந்தது, விருந்து அளித்து கவுரவித்தது, அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானது குறித்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *