பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், குதிரை ஓட்டுபவர் ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது.
இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் சூழல் உருவாகி உள்ளது. இதில், பாகிஸ்தானுக்கு எத்தகைய பதிலடி தருவது என்பது குறித்து தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, முப்படைகளும் கடந்த சில நாட்களாக போர் ஒத்திகையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்கும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்போது கடற்படை மற்றும் விமானப்படைகளின் போர் பயிற்சி குறித்தும் தயார் நிலை குறித்தும் அவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கினர்.
இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக நேற்று பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் நமது ராணுவம் பாகிஸ்தானுக்கு எந்த வகையான பதிலடி தருவது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காம் தாக்குதல் நடந்து இதுவரை 12 நாட்களான நிலையில், கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து பாதுகாப்பு தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல, பாகிஸ்தானும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு போருக்கு தயாராகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நாடு முழுவதும் நாளை (மே 7) போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. போருக்கு முன்பாக நாட்டு மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுபோன்ற ஒத்திகைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஒத்திகையில் 5 முக்கிய விஷயங்களை மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
* எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஏர் சைரன்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவை முக்கிய இடங்களில் நிறுவப்பட்டு உடனடியாக செயல்படும் வகையில் பரிசோதித்தல்.
* எதிரிநாட்டு தாக்குதலின் போது, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி, எச்சரிக்கை குறியீடுகளை அடையாளம் காணுதல் போன்ற அடிப்படையான ராணுவ நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
* வான்வழி தாக்குதல் நடக்கும் சமயத்தில், எதிரிகள் குடியிருப்புகளை கண்டறிவதை தடுக்க, மின் சேவையை முழுமையாக நிறுத்தி இருளில் மூழ்கடிக்கும் நடைமுறைகளை செயல்படுத்துதல்.
* அனல்மின் நிலையங்கள், ராணுவ கிடங்குகள், தொலைதொடர்பு மையங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் தொழில்நுட்பங்கள்.
* அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டங்கள் குறித்து ஒத்திகை பார்த்தல்.
மேற்கண்ட பயிற்சிகளை போர்கால ஒத்திகையில் மேற்கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது, போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
2. தாக்குதல் நடந்தால் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும் நடைமுறை, முதற்கட்ட மருத்துவ உதவி குறித்து பயிற்சி அளித்தல்.
3. வான்வழி தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரத்தையே இருளில் மூழ்கடிப்பு.
4. முக்கிய கட்டமைப்புகள் எதிரிகளின் கண்ணில் படாமல் மறைக்கும் நடவடிக்கை.
5. அவசர காலங்களில் தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல் மற்றும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் ஒத்திகை.
* இந்தியாவுக்கு முழு ஆதரவு: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
போர் பதற்றத்திற்கு மத்தியில், பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிபர் புடின், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இந்த கொடூர தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என குறிப்பிட்ட அதிபர் புடின், தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய புடின், அதற்கான அனைத்து உதவிகளும் இந்தியாவுக்கு செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அனைத்து செயல்களுக்கும் முழுமையான ஆதரவு தருவதாகவும் அதிபர் புடின் கூறியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக எந்த சமரசமற்ற பதிலடி தர வேண்டுமென இரு தலைவர்களும் கூறி உள்ளனர். மேலும், வருடாந்திர இருதரப்பு உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதை அதிபர் புடின் ஏற்றுக் கொண்டதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நிற்கும் நிலையில், இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.