வாஷிங்டன்: அமெரிக்காவில் 2வது முறையாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. உலக நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வரும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யுஎஸ்எய்டு) பல ஊழல்கள், முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப், 60 ஆண்டு கால அந்நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக மூட முயற்சிக்கிறார். இதற்காக வெளிநாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யுஎஸ்எய்டின் தலைமையகம் பூட்டப்பட்டு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.
யுஎஸ்எய்டு மட்டுமின்றி எப்பிஐ, வெளியுறவுத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு, பென்டகன் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களையும் குறைக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக எலான் மஸ்க் கடந்த வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் பதிவில், ‘‘அரசு ஊழியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் கடந்த வாரம் அவர்கள் முடித்த பணிகள், எட்டிய இலக்குகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலை இழக்க நேரிடும்’’ என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் மஸ்க்கின் கெடு முடிந்து நேற்று ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் அறிக்கை அனுப்ப வேண்டுமா? வேண்டாமா? என குழப்பிப் போய் உள்ளனர்.