சென்னை : ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ கிராமியக் கலைஞர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்தி குறிப்பில் “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து,
இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை நேற்று முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்..
சென்னையில் உள்ள 18 இடங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .