2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டமாக நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக, லடாக் உள்ளிட்ட பனிப் பகுதிகளில் 2026 அக்டோபர் 1ம் தேதியும், நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதி 2ம் கட்டமாகவும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகளை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக  தகவல் / Census work is going on in full swing in India

நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை கடந்த 2019ல் ஒப்புதல் வழங்கியது. அதன்படி, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் 2020 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டாக மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படாததால் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்தன. மேலும், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி தீவிர பிரசாரம் செய்தார்.

அது காங்கிரசுக்கு பெரிய அளவில் பலன் தந்தது. இக்கருத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. கர்நாடகா, பீகார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. மேலும் பல மாநிலங்களும் இதற்கான முயற்சிகளை எடுத்தன. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒன்றிய பாஜ அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த பரபரப்பான சூழலில், ஏப்ரல் 30ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூடியது. அதில், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டமாக நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ‘லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப்பொழிவு பகுதிகளில் அக்டோபர் 1, 2026 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3ன்படி 16.6.2025 (தோராயமாக) அன்று அரசிதழ் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பானது, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் சாதிகள் சேர்க்கப்படவில்லை. 1951ம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு, பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், இந்து, முஸ்லிம் போன்ற மத அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது.

சுதந்திரத்திற்கு முன்பு 1931ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டன. எனவே தற்போது நம்மிடம் இருக்கும் சாதிவாரி தரவுகள் 1931ம் ஆண்டில் எடுக்கப்பட்டவை. தற்போது முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *