அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் சேதப்படுத்தப்படும் சம்பவம் பெரிய அளவில் பற்றி எறியும் நிலையில் 20 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் , பொரிகன், லவ் லேண்ட் என நாடு முழுவதும் இடதுசாரி சார்பு நகரங்களில் டெஸ்லா கார்கள், கார் சேவை மையங்கள், சார்ஜிங் நிலையங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களும், தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடக்கின்றன. டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும். எலான் மஸ்க் நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்ற கோஷங்களுடன் போராட்டங்களும் நடைபெறுகின்றன. எலான் மஸ்க்க்கு சொந்தமான டெஸ்லா சொத்துக்கள் மீதான சமீபத்திய தொடர் தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார வாகனங்களை முன்னோடியாக கொண்டு இடதுசாரிகளிடமிருந்து ஆதரவை பெற்ற நிறுவனமான டெஸ்லா தற்போது எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. ட்ரம்ப் உடனான மஸ்கின் நெருக்கமான நட்பு அதிகரித்து வருவதும் டிவீட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதும் அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு கொடுத்த ஆதரவும் இடதுசாரிகளிடையே எதிர்ப்பை எழ முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன தாக்குதல்கள் குறித்து பேசிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இடது சாரி பில்லியனர்களால் திட்டமிடப்பட்டு நிதி அளிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். வன்முறையை பயங்கரவாதம் என குறிப்பிட்டதோடு, பைத்தியக்காரத்தனமானது என்றும் தவறானது என்றும் கண்டித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான போராட்டமும் அதற்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதும் சர்வதேச அளவில் சூடான விவாதங்களை கிளப்பி உள்ளது.