காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விடுதிகள், ஓட்டல்களில் சந்தேகப்படும் படியான நபர்கள் தங்கி உள்ளார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது. கடலோர மாவட்டங்களில் வெளி நபர்கள் ஊடுருவுகிறார்கள என தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர காவல்படை வீரர்களில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் தமிழகம்-கேரளா, தமிழகம் -கர்நாடகா, தமிழகம் -ஆந்திரா ஆகிய எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிர படுத்தப் பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரியை சுற்றி உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடந்தது. நேற்று படகுதுறைக்கு வந்தவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டார்கள். பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. கடலோர காவல் படை போலீசாரும், நவீன படகில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மற்ற சுற்றுலா தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.