பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நேற்று பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. முன்னதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் நிருபர்களிடம் கூட்டாக கூறுகையில், ‘எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரை பறிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பஹல்காம் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு நாங்களும் கவலையை வெளியிட்டு இருக்கிறோம். நாங்களும் எங்கள் இரங்கலை தெரிவித்தோம். பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல், நம்ப முடியாத வேகத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதைத்தான் கூறி வருகிறோம். பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்’ என்றனர்.