அதிமுக – பாஜ கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து புதிய கூட்டணிக்கு செயற்குழு ஒப்புதல் அளித்ததுடன், ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்பது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

மத்திய அரசுக்கு பாராட்டு முதல் திமுக அரசிற்கு கண்டனம்!அதிமுக செயற்குழுக்  கூட்டத்தில் எடுக்கப்பட போகும் தீர்மானங்கள்!

பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்ததை ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. பாஜவால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்து, எம்எல்ஏவாக வெற்றிபெற முடியவில்லை என்று அவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகிவிட்டார்கள்.
ஆனாலும், பாஜ மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜ கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதை பாஜ மேலிட தலைவர் அமித்ஷா கடந்த மாதம் சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் எடப்பாடி வீட்டில் அமித்ஷாவுக்கு விருந்து வைத்து கூட்டணியை இருவரும் உறுதி செய்து கொண்டனர். அதேநேரம், அதிமுக – பாஜ கூட்டணி அமைவது குறித்து கட்சி நிர்வாகிகளிடமோ, அதிமுக மாவட்ட செயலாளர்களிடமோ எடப்பாடி பழனிசாமி எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்ததாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். அதிமுக – பாஜ கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற செய்து `மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் அமைத்து வரும் எடப்பாடிக்கு பாராட்டுகள்என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *