அதிமுக – பாஜ கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார். இதையடுத்து புதிய கூட்டணிக்கு செயற்குழு ஒப்புதல் அளித்ததுடன், ஒன்றிய அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் ஆதரவு அளிப்பது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்ததை ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. பாஜவால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்து, எம்எல்ஏவாக வெற்றிபெற முடியவில்லை என்று அவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகிவிட்டார்கள்.
ஆனாலும், பாஜ மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜ கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு: 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் கூட்டணியில் இடம்பெற செய்து `மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் அமைத்து வரும் எடப்பாடிக்கு பாராட்டுகள்என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.