மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்;
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அய்யா குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் “தகைசால் தமிழர்” கடந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட அய்யா குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.