பிரான்ஸ் அரசின் பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் கடந்த 2016ல் வாங்கப்பட்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இந்திய கடற்படைக்காக 26 ரபேல் மரைன் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை குழு கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ரூ.64,000 கோடி மதிப்பில் இந்திய கடற்படைக்காக 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் அரசுகளுக்கு இடையே நேற்று கையெழுத்தானது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைளை ரபேல் விமானத்துடன் ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பமும் பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்.
ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரபேல் மரைன் விமானங்களின் விநியோகம் தொடங்கும். 2030ம் ஆண்டுக்குள் 26 ரபேல் விமானங்களும் வழங்கப்படும். இந்த ரபேல் விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் பயன்படுத்தப்பட உள்ளது என பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.