கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என்று ஒன்றிய அரசு கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக இயற்கை பேரிடர்கள் குறித்த ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதலின்படி அவர் மறுசீரமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமா என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வயநாடு எம்பியான பிரியங்கா காந்தி வதேரா தனது எக்ஸ் தள பதிவில்,‘‘வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள், நிலம், வாழ்வாதாரங்கள் என அனைத்தையும் இழந்து விட்டனர். ஆனாலும் அரசு கடன் தள்ளுபடி வழங்க மறுக்கிறது.
மாறாக அவர்களுக்கு கடன் மறுசீரமைப்பு மட்டுமே கிடைக்கிறது. இது நிவாரணம் இல்லை. இது மிகப்பெரிய துரோகமாகும். இந்த அக்கறையின்மையை நாங்கள் கண்டிக்கிறோம். வயநாட்டில் உள்ள எங்களது சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்கிறோம். அவர்களின் வலி புறக்கணிக்கப்படாது. நீதி கிடைக்கும் வரை அனைத்து தளங்களிலும் நாங்கள் குரல் கொடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.