சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். ஆளுநருக்கு எதிராக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வந்த நிலையில் உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பேரவைக்கு வந்த ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். இதையடுத்து, அண்ணா பல்கலை. சம்பவத்துக்கு வேந்தரான ஆளுநர் ரவி பொறுப்பேற்க வேண்டும் என்று வேல்முருகன் எம்எல்ஏ முழக்கமிட்டார். சட்டப்பேரவைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி நுழைந்த போது எம்எல்ஏ வேல்முருகன் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இவ்வாறு முழக்கமிட்டனர்.
![சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் : அதிமுக எம்எல்ஏ.,க்கள் வெளியேற்றம் !!](https://media.tutyonline.net/assets/2025_Part_01/tnassemblygovernoradmk.jpg)
இதைத் தொடர்ந்து, பேரவை வளாகத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். உரையை வாசிக்காமல் 2 நிமிடங்களிலேயே பேரவையில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றது பேசும் பொருளாகி உள்ளது. இதனிடையே தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களையும் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.