பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான ‘யர்லுங் இட்சாங்போ’ வழியாக அருணாசலபிரதேசத்தில் நுழைந்து, அசாம் மாநிலத்தில் ஓடுகிறது. பின்னர் தெற்கு நோக்கி பாய்ந்து வங்கதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.

China's dams in Tibet may pose threat to India's water supply | Satellite  images explain

திபெத் பகுதியில் பெரும்பாலும் பாயும் இந்த பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் பகுதியில் நீர்மின்சாரத் திட்டத்திற்காக உலகிலேயே மிகப்பெரிய அணை கட்ட சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை உட்பட ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தென் சீனா அணை உட்பட உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகப்பெரியதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் திபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. தற்போது 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
சீனா அணை கட்டிவிட்டால் பிரம்மபுத்திரா நதி மீது சீனாவுக்கு அதிகாரம் வந்துவிடும். மேலும் எல்லைப் பகுதிகளில் இருந்து பெரிய அளவில் தண்ணீரை திறந்து இந்தியாவுக்குள் விடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அணை கட்டுவதால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது. அதே சமயம் அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணை கட்டுகிறது.

பெய்ஜிங்கில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற எல்லைப் பிரச்சினைக்கான இந்தியா, சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகள் மாநாட்டில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டிய நதிகளின் தரவுப் பகிர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையில் பிரம்மபுத்திரா அணை, பூகம்பங்கள் நிகழும் டெக்டோனிக் தட்டு எல்லையில் அமைந்துள்ளதால், பிரம்மபுத்திரா மீது கட்டப்படும் சீனாவின் மிகப்பெரிய அணை பெரிய சிக்கல்களை உருவாக்க கூடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த கருத்தை மீறி நேற்று சீனா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,’ திபெத் பகுதியில் ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் பற்றிய கவலைகளை புறந்தள்ளிவிட்டு பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட உள்ள நீர்மின் திட்டம் பாதுகாப்பானது. அந்த அணை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. விரிவான புவியியல் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம், திட்டத்திற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் நிலப்பரப்பில் அதிக மழை பெய்யும் ஒரு பகுதியில் இந்த அணை கட்டப்படும்.

இந்த அணையில் அமையும் நீர்மின் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் 300 பில்லியன் கிலோ வாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 30 கோடிக்கும் அதிகமான மக்களின் வருடாந்திர குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது. 2020ம் ஆண்டில், சீனாவின் அரசுக்கு சொந்தமான பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷனின் அப்போதைய தலைவரான யான் ஷியோங் கூறுகையில் பிரம்மபுத்திரா நதி ஓடி வரும் யார்லுங் சாங்போவின் இருப்பிடம் உலகின் மிக அதிக நீர்மின் உற்பத்தி செய்யக்கூடிய பகுதி என்று குறிப்பிட்டார்.
China Approves World's Largest Dam On Brahmaputra Costing $137 Billion,  India Expresses Concern | Republic World

ஏனெனில் 50 கிமீ தூரத்திற்கு மேல் 2,000 மீட்டர் செங்குத்து நீர் வீழ்ச்சியை பிரம்மபுத்திரா ஆறு சீன பகுதியில் கொண்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 70 மில்லியன் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்காக நதியின் நீர் மின் ஆற்றலைப் பயன்படுத்த, நாம்சா பர்வா மலை வழியாக 20 கிமீ நீளமுள்ள 6 சுரங்கங்கள் அமைத்து நதியின் ஓட்டத்தின் பாதியை நொடிக்கு சுமார் 2,000 கன மீட்டர் என்று திருப்பிவிட வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த நீர்மின் திட்டம் அமைந்தால் அது, திபெத் பகுதிக்கு ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித்தரும். இத்திட்டம் நிறைவேறியதும், மின்சாரம், நீர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகிய உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தும். இது திபெத்துக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான வளர்ச்சியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த திட்டத்தால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *