எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு இனி இந்தியாவின் பதிலடி புது மாதிரியாக இருக்க வேண்டும். பாகிஸ்தானின் எந்த செயலுக்கும் அவர்களுக்கு தரப்படும் பதிலடி மிகவும் வலுவானதாக இருக்க வேண்டுமென ஆயுத படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து, ஆயுத படைகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு இனி இந்தியாவின் பதிலடி புது மாதிரியாக இருக்க வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்காக பாகிஸ்தான் தரும் விலை மிக அதிகமாக இருக்க வேண்டும். எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் துப்பாக்கி தோட்டாக்களால் பதிலடி தர வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதில், எந்த மூன்றாவது நாடும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேசப்பட வேண்டிய ஒரே விஷயம், ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு அவர்கள் வெளியேறுவதைப் பற்றி மட்டுமே. சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை பாகிஸ்தான் திரும்பி தர வேண்டும். ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல்கள் இடையே மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மற்ற எந்த விவகாரங்களும் பேசப்படாது.
பாகிஸ்தானில் எந்த இடமும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பானது இல்லை என்பதை நாங்கள் உணர்த்தி உள்ளோம். யாரும் தாக்குதலுக்கு அப்பாற்பட்டு இல்லை, யாரையும் எங்களால் தாக்க முடியும் என்பதை காட்டி உள்ளோம். காஷ்மீரின் உதம்பூரில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்ததை தொடர்ந்து, இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் 8 விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. அதன்பின் பாகிஸ்தானின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. உடனடியாக அமெரிக்கா மூலம் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தினர். இனியும் பாகிஸ்தான் ஏதாவது செய்தால், அவர்களுக்கு தரப்படும் பதிலடி மிக மிக கடுமையாக இருக்கும் என்பதை அமெரிக்க துணை அதிபர் வான்சிடம் இந்தியா தெளிவாக கூறி உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பிரதமர் வந்தால்தான் இனி அனைத்துக்கட்சி கூட்டம்; மாநிலங்களவை எம்.பி கபில் சிபல் கூறுகையில்,
‘‘இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, 49 மணி நேர பேச்சுவார்த்தை நடந்தது என்கிறார். என்ன நடந்தது? ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பது குறித்து இந்திய மக்களுக்கு தெரிவிக்காதது ஏன்? போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இந்த முறை பிரதமர் மோடி பங்கேற்றால்தான் அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதேபோல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்டி விவாதிக்க வேண்டும். மன்மோகன் சிங் இன்றைக்கு பிரதமராக இருந்திருந்தால் அவர் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பங்கேற்றிருப்பார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தையும் கூட்டியிருப்பார் ’’ என்றார்.
ராணுவத்தினரின் தேவைக்காக ராஜஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு
ராஜஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான தண்ணீரை ராஜஸ்தான் அரசால் சப்ளை செய்ய முடியவில்லை. இதையடுத்து, கூடுதல் தண்ணீர் தந்து உதவும்படி பஞ்சாப் அரசுக்கு ராஜஸ்தான் மாநில அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, ராஜஸ்தானுக்கு கூடுதல் தண்ணீர் சப்ளை செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.