இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்தியா, இலங்கை மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் சகாயம் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை யாழ்ப்பாணத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவரித்ததுடன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்னைக்கு இந்தியா, இலங்கை அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை அரசு முன்வந்து நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ‘‘இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும்’’ என மீனவப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். வரும் ஏப். 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்ல உள்ள நிலையில், இரு நாட்டு மீனவ பிரச்னைகள் குறித்து அந்நாட்டு அதிபருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.