“எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம்” என மொழி அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “இருமொழிக் கொள்கை மற்றும் நியாயமான எல்லை நிர்ணயம் குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிப்பதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.
வெறுப்பு குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்; யோகி ஆதித்யநாத் பாடம் எடுப்பது அரசியலின் உச்சகட்ட அவல நகைச்சுவை .நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.
இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என தெரிவித்துள்ளார்.