ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் ஆபரேஷன் சிந்தூா் குறித்து நேற்று விளக்கம் அளித்தனர்.
விமானப்படை இயக்கத் தலைவர் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி: இந்தியாவின் அனைத்து ராணுவ தளங்களும், அமைப்புகளும் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. தேவை ஏற்பட்டால் எந்தவொரு பணியையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு, இந்திய நிறுவல்களை குறிவைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளை திறம்பட முறியடித்தது. ஆகாஷ் அமைப்பு போன்ற உள்நாட்டு வான் பாதுகாப்பு ஆயுதங்களின் அற்புதமான செயல்திறன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
ஒருங்கிணைந்த விமானப்படை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பாகிஸ்தானின் ராணுவத் தாக்குதல்களை முறியடித்தது. எங்கள் நடவடிக்கை பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது, ஆனால் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை ஆதரிக்கத் தேர்ந்தெடுத்து மோதலை விரிவுபடுத்தியது. எனவே அவர்களுக்கு ஏதெனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு.
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் ஏவுகணை மற்றும் பிற ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டன. இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு அமைப்பான ஆகாஷின் திறன் சோதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கை ஆதரவுகள் மூலமாகவே இது சாத்தியமானது. இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் சீனத் தயாரிப்பான பிஎல்-15 ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. அந்த ஏவுகணையின் உடைந்த பாகங்கள் இவை தான். (சில புகைப்படங்களை காண்பித்தார்) பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸ் பகுதியில் சில அணு ஆயுத அமைப்புகள் இருப்பதாக கூறியதற்கு நன்றி. அது பற்றி எங்களுக்கு தெரியாது. அங்கு என்ன இருந்தாலும் சரி, நாங்கள் அந்த பகுதியை தாக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையின் கை ஓங்கியிருந்தது. கடற்படை போர் கப்பல்களின் நிலை நிறுத்தம் எதிரி அருகில் வருவதை தடுத்தது. இந்தியவின் கப்பல்கள், பாகிஸ்தான் வான் படை சுதந்திரமாக செயல்படுவதை தடுத்தது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போர் விமானம் சேதம்; பாகிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தான் தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி இதை தெரிவித்தார். அவர் கூறும்போது,’ இருநாட்டு மோதலில் எங்கள் போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்தது. பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை. இதுபோன்ற செய்திகள் அனைத்தும் போலியானவை’ என்றார்.
- இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து அமெரிக்காவும், இங்கிலாந்தும் விவாதித்துள்ளது. மேலும் இரு அண்டை நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
- பாகிஸ்தானுக்கு ஆதரவான வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்த உபி மாநிலம் சம்பல் மாவட்டம் முக்ராப்பூர் கிராமத்தை சேர்ந்த ஜமாத் அலி(27) கைது செய்யப்பட்டுள்ளார்.
மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.