கோவை: கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை, கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் இதையடுத்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் பாஜவிற்கு எதிரான கருத்துகளை வைத்திருந்தாலும், எந்த பாகுபாடும் இன்றி பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜ மாநிலத் தலைவராக யார்? வர வேண்டும் என்பதை எங்களது கட்சி தலைவர்கள் தீர்மானிப்பார்கள். யார்? எந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். அண்ணாமலை இந்த கட்சியில் தொண்டனாக எப்போதும் இருப்பான்.
தலைவர்கள் மாறித்தான் ஆக வேண்டும். தலைவர்கள் மாறுவது தான் பாஜவின் அடிப்படை அழகு. கட்சி வளர வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. பாஜ மாநிலத் தலைவர் பதவி குறித்து காலம், நேரம் வரும் போது பதில் சொல்வோம். மோடி எங்களை வழிநடத்துகிறார். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.