அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று 2வது நாளாக அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதில், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 41 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திலும், மாநிலங்களவை தேர்தலில் 2 இடங்களுக்கு வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பேசிய பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.
அதனால் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தேமுதிகவுக்கு தற்போது பெரிய அளவில் வாக்கு வங்கியும் இல்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய லாபம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதனால், அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இரண்டு பேருக்கு மட்டுமே அதிமுக சார்பில் மாநிலங்களவை சீட் வழங்க வேண்டும்.
குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு நபருக்கும், வடமாவட்டத்தை சேர்ந்த ஒரு கட்சி நிர்வாகிக்கும் எம்பி பதவி வழங்க வேண்டும். இதன்மூலம் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவார்கள். இதை கருத்தில் கொண்டு கட்சி தலைமை செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.