வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தாயகம் புறப்பட்டார். பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிளேர் ஹவுஸ் விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார். அங்கு கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்தியர்கள் குவிந்து ‘வந்தே மாதரம், ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் சந்திப்பாக, டிரம்ப் நிர்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்தார். அதனை தொடர்ந்து அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களையும் பிரதமர் சந்தித்து ஆலோசித்தார். இந்நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தாயகம் புறப்பட்டார்.